Monday, January 14, 2019

வீரக்கலை


உண்மையில் இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற கதையை, இந்தக் கதை நடக்கிற நாட்டில்  வாழும் மக்களின் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதியிருந்தால், இந்நேரம் அது உலகப்புகழ் பெற்றிருக்கக்கூடும். கெடுவாய்ப்பாக அந்த நாட்டு மக்கள் மொழிக்கு எழுத்துரு எதுவும் இல்லை. எழுத்துருதானே இல்லை, வாய்மொழியாக சொல்லலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், மேலுமொரு மிகப்பெருங் கெடுவாய்ப்பாக அவர்களின் மொழிக்கு பேச்சொலியும் இல்லை. இப்போது நீங்கள் கடுங்கோபத்துடன் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி, “எழுத்தும் இல்லை, பேச்சும் இல்லை பிறகு எப்படி அதை மொழினு சொல்ற..” என்று கேட்பது என் காதில் மிக சன்னமாக விழுகிறது. உண்மையில் அவர்கள் மொழி என்னவென்று எனக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் என்னுடனும், நான் அவர்களுடனும் செய்திகளையும், கருத்துகளையும் பறிமாறிக்கொண்டுள்ளோம். மொழிக்கான பயன்பாட்டினை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அதை மொழி என்று சொல்வதில் உள்ள பிரச்சினையை விட்டுவிடுவோம்.

அந்த நாட்டுக்கு ஆயிரத்தெட்டு பெயர்கள். பொதுவாக அங்கே எல்லாமே ஆயிரங்களில் தான் தொடங்குகிறது. மனிதனின் பெயர், மனைவி, மக்கள்,  ஆயுட்காலம், மன்னர்களின் எண்ணிக்கை, செல்வச் செழிப்பின் அளவு, என எல்லாவற்றையும் அவர்கள் ஆயிரங்களில்தான் கணக்கிடுகிறார்கள். அதனால், அந்த நாட்டின் ஆயிரம் பெயர்களையும் சொல்லி அவற்றின் காரணக் கதைகளையும் சொன்னால் நீங்கள் சுவாரசியம் கொள்ளவோ, சலிப்படையவோ செய்யலாம். அதுமட்டுமல்லாமல், அந்தக் கதைகள் எல்லாம் மிகப்பெரிய நெடுங்கதையாகவும், நீண்ட கிளைக் கதைகளாகவும் இருக்கின்றன. இப்படியான கதைகளில் நீங்கள் தர்க்கரீதியாக ஐயம் கொள்வீர்களாயின் நீங்கள் உண்மையை தரிசிக்கவே முடியாது என்ற சாபத்திற்கு ஆளாவீர்கள். அதனால், மேற்கொண்டு கதையைத் தொடருவோம்,

அந்த நாட்டைக் குறிப்பிடும்போது அதன் ஆயிரம் காரணப் பெயர்களையும் சொல்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால், இனி ஆயிரம் பெயருள்ள நாடு என்று வைத்துக்கொள்வோம். ஒரு சுவாரசியமான தகவல் அங்கே எல்லாமே காரணப் பெயர்தான் இடுகுறி என்பதே கிடையாது.

அந்த நாட்டின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்துகொள்வது நல்லது. அந்த நாட்டின் காலத்தை நீங்கள் வரலாற்றுக் காலம் என்றோ மத்திய காலம் என்றோ, நவீன காலம் என்றோ எப்படியும் வகைப்படுத்த முடியாது. அது எல்லாம் கலந்த கலவையாக இருப்பதால் வரலாற்றாசிரியர்களுக்கு கால வரையரை செய்வது என்பது இன்னும் சிக்கலாகவே இருக்கிறது. இதனாலேயே அந்த மக்கள் தங்களைக் காலத்தை வென்றவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆயிரம் பெயருள்ள நாட்டின் மக்களில் சிலர் தங்களையும் தங்கள் நாட்டையும் கடவுள்தான் படைத்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதனால், இவர்களின் வரலாறு அறிவியல் முறையில் அமையவில்லை என்று நீங்கள் ஒதுக்கித்தள்ள முயற்சித்தால் அது முடியாது. ஏனென்றால் அந்த நாட்டு மக்கள் அவர்களின் வரலாற்றை அதே கதையை அறிவியல் முறையிலும் சொல்கிறார்கள். அவர்கள் உலகத்தின் தோற்றத்தை உயிர்களின் தோற்றத்தை பரிணாமத்தை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் கச்சிதமாக புனைவை அறிவியலுக்குள்ளும், அறிவியலை புனைவிற்குள்ளும் பொருத்துகிறார்கள். இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதாவது அவர்கள் தாங்கள் வானரத்தில் இருந்து முதல் மனிதனாக வெளியே வந்ததிலிருந்து அவ்வளவு தெளிவாக அவர்கள் தங்கள் வரலாற்றைச் சொல்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆயிரம் பெயருள்ள நாட்டை ஆள்பவர்களைப் பற்றி சொல்வது என்றால் முடி மன்னர்கள் என்றோ அல்லது ஜனநாயகத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்றோ, அவர்களை தெளிவாக வரையறுப்பது குழப்பமாகவே இருக்கிறது. ஏனென்றால் நான்தான் முன்னமே கூறினேன் இல்லையா, அங்கே எல்லாமே கலவையாக இருக்கிறது என்று. மேலும், அவர்கள் பல தகவல்களை மாற்றிமாற்றி முன்னுக்குப்பின் முரணாக சொல்கிறார்கள். எழுத்தும் பேச்சும் இல்லாத மொழிகொண்ட மக்களைப் பற்றி தெரிந்துகொள்வது கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும் என்று விட்டுவிட்டேன். ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அவர்கள் கோருவது, எல்லாவற்றிலும் தாங்கள்தான் முதன்முதல் என்ற உலகம் முழுமைக்குமான வரலாற்றுத் தலைமை என்பதைப் புரிந்துகொண்டேன்.

இந்த ஆயிரம் பெயருள்ள நாட்டின் ஆயிரம் பெயருள்ள மக்களைப் பற்றி மேலதிகமாக விவரித்து உங்களைச் சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. ஆனால், அவர்களிடம் மிகவும் பிரபலமான சுவாரசியமான ஒரு கலை வழக்கத்தில் இருக்கிறது. அந்தக் கலையைப் பற்றித் தெரிந்துகொள்ள அக்கலையில் வல்லுநரான ஒருவரின் அரங்க நிகழ்ச்சிக்குப் பின்னர், என்னை ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்காரன் என்று சொல்லிக்கொண்டு அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். எப்படி இவ்வளவு பிரமாதமாக நிகழ்த்துகிறீர்கள் என்று வியந்தேன். எங்களின் வீரக்கலைக்கு நிகர் தரணியில் எங்குமே இல்லை என்றார். அவருடைய அந்தக் கருத்து ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருந்தது. நேர்காணல் முடிந்த பிறகு எனக்கு விபரிதமான ஆசை ஒன்று தோன்றியது.
கொஞ்சம் தயக்கத்துடன் எனக்கு இந்த வீரக்கலையைக் கற்றுத்தர முடியுமா என்று கேட்டேன்.

ஒரு மெல்லிய புன்னகையுடன் “ஓ… தாராளமாக…” என்று ஒப்புக்கொண்டார்.

“வாரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு, நாள் நன்றாக இருக்கிறது. நாளைக்கே தொடங்கி விடலாம்.” என்று கூறிவிட்டு அவருடைய முகவரியைக் கொடுத்துவிட்டுக் கூடவே ஒரு ஆளுயர நிலைக்கண்ணாடி ஒரு கூர்மையான வாள் கொண்டுவரச் சொன்னார்.

மறுநாள் காலை அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, முந்தின நாள் இரவு வாங்கிய ஆளுயர நிலைக்கண்ணாடி, வாளுடன் சரியாக சூரியோதயத்தின் போது குருதட்சனையுடன் பயபக்தியுடன் அவர் முன்பு நின்றேன்.

குரு வணக்கத்துடன் பயிற்சித் தொடங்கியது. இந்தக் கலையை பயில்வதற்கு மன தைரியம் வேண்டும். எதற்கும் அஞ்சக் கூடாது. என்னவானாலும் கவலைப்படக் கூடாது என்று கூறிவிட்டு அந்தக் கலையின் முதல் நிலையை நிகழ்த்திக் காட்டினார்.

ஒரு ஆளுயர நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்தார். சிறிது நேரத்தில் ஒரு பிணம் உயிர் பெற்று எழுவது போல எழுந்து நின்றார். கையிலிருந்த போர் வாளை மின்னல் வேகத்தில் சுழற்றி சுழற்றி வீசினார். நிச்சயமாக அந்த வீச்சு பூமிப்பந்தின் மீது பட்டிருந்தால் ஒரு எலுமிச்சை பழம்போல இரண்டு துண்டாக விழுந்திருக்கும். ஆனால், என்ன ஆச்சரியம் கண்ணாடிக்கு ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.

இப்போது நீயும் இதுபோல, நீ கொண்டுவந்திருக்கும் கண்ணாடி முன்பு நின்று சுழற்று என்று வாளை எனது கையில் கொடுத்தார்.

நானும் அவரைப் போலவே நிலைக்கண்ணாடி முன்பு தானத்தில் அமர்ந்தேன். ஆனால், சாதாரணமாகத்தான் எழுந்தேன். ஒரே வீச்சு கண்ணாடி சுக்கல் நூறாக உடைந்துவிட்டது. நல்ல வேளை எனக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

“நான் உங்களைவிட வலுக்குறைவாகத்தான் வீசினேன். ஆனால் கண்ணாடி உடைந்துவிட்டது. மண்ணிக்க வேண்டும்.” என்றேன்.

அதற்கு அவர் ஒரு கர்வப் புன்னகையுடன் “பரவாயில்லை, முதலில் நீ ஒரு சாஸ்வதமான கண்ணாடியை செய்ய வேண்டும்.” என்றார்.

நான் புரியாமல் நின்றேன்.

“பார், என்னுடைய கண்ணாடியைப் போல அது சாஸ்வதமானதாக இருக்க வேண்டும். எவ்வளவு முயன்றாலும் உடைக்க முடியாது. ஏனென்றால் அது தத்துவத்தால் செய்தது.” என்றார்.

நான் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தேன்.

கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள் என்ற எனது குழப்பமான பார்வையைப் புரிந்துகொண்டவர் போல, அவர் தத்துவத்தில் கண்ணாடி செய்யும் முறையைக் கூறினார்.

“மனம் கண்ணாடி, அகம் கண்ணாடி, பூமியின் புறமாய் சூழ்ந்திருக்கிற வானம் கண்ணாடி. எல்லாமே கண்ணாடிதான். அகக் கண்ணாடியை எப்படி பார்ப்பது? அதற்கு உன்னிலிருந்து நீயே உன்னை வேறாக, வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அப்போது உன்மீது உனக்கே வெறுப்பு தோன்ற வேண்டும். பின்னர் அப்படியே அதை அகத்திலிருந்து புறத்தில் பிரதிபலிக்க வேண்டும். பின்னர், மனிதர்களை மட்டுமல்ல மூச்சுவிடும் எல்லா ஜீவராசிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நிலம் நீர் என எல்லாவற்றையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு பெருவெறுப்பு வெடித்துக் கிளம்பும். அதில் நீ மட்டும்தான் பிரதானம், ஆதியிலும் முதல்வன் கடைசியிலும் முதல்வன் நீயே என்று உணரவைக்கும். உன்னை ஏற்றுக்கொள்பவர்கள் உம்மினம், ஏற்றுக்கொள்ளாதவர்கள் உம்மினும் கம்மியினம் என்று படிப்படியாக அது ஒரு தத்துவமாக உறுதிப்படும். நீ அடைந்த தத்துவத்தைப் பரப்ப அதைக் கோட்பாடாக்கி விளக்க வேண்டும்.  அப்போதுதான் நீ வைத்திருக்கும் கண்ணாடி சாஸ்வதப்படும். நீயும் இந்த வீரக்கலையின் மகா கலைஞன் ஆவாய்.” என்று உச்சாடனம் சொல்வதைப் போல சொல்லி முடித்தார்.

அவருடைய விளக்கத்துக்குப் பிறகு  அந்தக் கலையை யாரும் கற்றுக்கொள்வது மிகவும் எளிது என்று தோன்றியது. விரைவிலேயே அந்தக் கலையை கற்றுக்கொண்டேன். நானும் அந்தக் கலையில் குறிப்பிடத்தக்க கலைஞனாக மாறியிருந்தேன். பிறகு ஒருநாள் கண்ணாடி முன்பு நின்று சண்டையிடும் ஒரு மகா மகா கலைஞனின் அரங்க நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களாக வந்திருந்த அத்தனைபேரும் அவரைப் போலவே மகா கலைஞர்களாக இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கலை ஒரு தொற்று நோயைவிட வேகமாக, காற்றைவிட பலமாக பரவிக்கொண்டிருந்தது. சுயவெறுப்பிலிருந்து உருவான கலையின் உக்கிரத்தில் மனிதர்கள் அகோரமாகிக்கொண்டிருந்தார்கள். உண்மையைச் சொல்வதென்றால் பார்க்கின்ற யாருமே மனிதர்களாகவே தெரியவில்லை.

அந்த வீரர்கள் கூட்டமாக இருக்கும் போது அச்சமில்லை, அச்சமில்லை என்று கர்ஜித்தார்கள். தனிமையில் ஒரு புழுவைப்போல நடுங்கிச் சுருங்கிப் போனார்கள். அதனால், அவர்கள் எப்போதும் கும்பலாகவே இருக்க பழகிக்கொண்டார்கள்.

இந்த கலையில் தனக்கு அடுத்தபடி எதிரியும் பிரதானம் என்பது வெறியூட்டுவதாக இருந்தது. அந்த எதிரி யாருமில்லை கண்ணாடியில் இருக்கும் நான்தான். கண்ணாடியின் மீது வீசும் ஒவ்வொரு வீச்சும் என்னைக் காயப்படுத்தவில்லை. ஆனால், எதிரிகள் காயப்பட்டார்கள். அதேபோல எதிரிகளும்தான். ஒவ்வொருமுறையும் என்னைக் கொன்றுவிடும் மூர்க்கத்துடன் வாளை சுழற்றி வீசுகிறேன் எதிரிகள் மடிகிறார்கள். இப்போது என்னைப் பார்ப்பதற்கு எனக்கே அச்சமாக இருந்தது. ஒருபொழுது அவர்களின் அகோரம் மேலும் பெரும் அகோரமானபோது நெருப்பு ஊசியைப் போல அச்சம் என்னை ஊடுருவியது.

ஒரு யுகத்தின் வறட்சி சூழ்ந்து ஈரம் என்பது எச்சிலில்கூட இல்லாமலாகி உலகம் கருகிச்சாகட்டும் என்ற அளவுக்கு வெறுப்பு வளர்கிறதே. அய்யோ! இப்படி எல்லோரும் கையில் கொலைவாளுடன் பைத்தியமாக அனைவரின் பாதங்களும் சூன்யத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறதே.

மனிதன் நேர்ப்புள்ளிகளிலிருந்து எங்கோ விலகிச் செல்கிறானே. இது பிறழ்வுதான். இதிலிருந்து நான் விலக வேண்டும். வழிதவறிய இந்த கும்மிருட்டு பயணத்தை திசைதிருப்ப ஒரு நட்சத்திரத்தின் ஒளி வேண்டும் எனக் கோரி அசரிரீயாக மனதின் வெளியெங்கும் எதிரொலித்தது. இந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று அறிய முடியாத அளவுக்கு நெடியதாக இருந்தது.

இந்தக் கலை எப்படி என்னைக் கவர்ந்தது? இந்தக் கலையை நான் ஏன் கற்றுக்கொண்டேன்? ஒவ்வொரு தனிமனிதனின் சுயநலம், இதை நியாயப்படுத்த சுயநலத்தை பொதுநலமாக்க வேண்டும். அல்லது சுயநலத்தின் பலனை எல்லோருக்குமானதாக்க வேண்டும். அதை வென்றெடுக்க அரசியலாக்க வேண்டும். வெறுப்பிலிருந்து தோன்றும் அரசியலில் எதிரி வேண்டும். இப்படி லாபம் தரும் வெறுப்பும் கவரக்கூடியதாகத்தான் இருக்கிறது. இந்தக் கண்ணாடி முன் நின்று சண்டையிடும் வீரக்கலையின் மோகத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று உளைந்துகொண்டிருந்தேன்.

மனதின் ஆழத்தில் ஒரு சொட்டு ஈரம் தேடி, கள்ளமில்லா நட்சத்திரத்தின் ஒளியைத் தேடி, சாஸ்வதக் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் சாஸ்வதம் என்று மூர்க்க வலுக்கொண்டு நிரந்தரம் என்று கர்வப்படும் உடலை ஒடுக்கும் வழி தேடி யாக்கையின் நரம்புகளாய் கிளைத்திருக்கும் வீதிகளெங்கும் அலைந்தேன். உச்சிவெடித்து உயிர்வளி பிரியும் வேகத்தில் வெப்பம் ஏறியது. சக்கரமாய் மாறி விரைந்தது கால்கள். ஈரத்தின் சுவடுகள்கூட மறைந்து வெடித்துக் கிடந்த நிலத்தில் ஒருமிடறு தண்ணீர் இன்றி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மயங்கி சுருண்டு மடிந்துகொண்டிருந்தார்கள். கடைசி விதையும் கருகும் வாசனை அறிந்து வானம் தனது கருணையைப் பொழிந்தபோது மனிதர்கள் புதிதாய் துளிர்விட்டு முளைத்தார்கள். அங்கே சரியாக முளைத்திராத பால்பற்களைக் காட்டி சிரித்த ஒரு குழந்தையிடமிருந்து வெளிப்பட்ட நட்சத்திர ஒளியில் பாதை தெரிந்தது. புஜபல பராக்கிரமம் மிக்க கண்ணாடி முன்பு நின்று சண்டையிடும் சாஸ்வதக் கலைஞன் பட்டென துடிதுடித்து வீழ்ந்தபோது நிலையாமை தன்னை நிறுவிக்காட்டியது. அன்பு சூன்யத்தின் வலிவோடு மானுடத்தை விழுங்கியது. ஆனாலும், அந்திமத்தில் இருக்கும் அந்தக் கலையின் கர்த்தாக்கள் ஈனமாக கண்ணிகளை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியாக அந்தக் கலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதைப் படிக்கும் உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்புக் கதையைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுமாயின் அதற்கு காரணம் நானல்ல. அந்த மொழி பேசும் பிரதேச மக்களே காரணம். ஒரு வேளை நீங்கள் இப்படியான மக்கள், வீரக்கலைஞர்கள் இந்த பூமிப் பரப்பில் எங்காவது இருப்பதாக அறிந்திருப்பீர்களானால் உங்கள் ஆய்வை மேலும் தொடருங்கள்.

அதன் பின்னர், கண்ணாடி முன்பு நின்று சண்டையிடும் வீரக்கலையை நீங்களும் தெரிந்துகொள்வீர்கள். அப்போது அதனுடைய அகோரத்தில் அதிர்ந்து  அதை மாய்ப்பதற்கான வழியையும் கண்டடைவீர்.

Friday, December 7, 2018

SWAMI ANANTHA THEERTHA LIFE IS A LESSON Not words and writings but deeds are necessary


Balaji Andhanar
Indian express (Tamil)
Translated by Krish

When I had interactions with Prof Alagarasan and Writer Stalin Rajangam i got this information shared by Stalin Rajangam...

" Ambedkar had quoted two examples for the caste discriminations in the Indian villages. Both villages were in Tamilnadu. Those were taken from the writings of one Gandhian namely Ananda Theertha. He was the South Zonal Secretary of Harijan Seva Sangh. He fought vehemently for the rights of Harijans in Melur Area of Madurai district. After reading Ambedkar notes about him i went to Melur for field study. I had an interaction with contemporaries of Ananda Theertha in that area who knew him. I understood Anantha Theertha was in their memory with uneraseable records with proud moments. But i could not get written evidences about him".

After this meeting i also searched information about Anand Theertha. I realized he was an unparalleled social reformer. After Pune Pact there was an animosity between the followers of Ambedkar and Gandhi. Now there is a change in perception among neo-ambedkarists. More than the so-called idelogical friends of Dalits, Gandhian followers who were considered as anti Dalits had done more for the development of oppressed through Harijan Seva Sangh. This re-analysis of Neo Ambedkarists has brought Gandhi and Gandhian followers closer to them. Like wise Gandhians also have changed their perception towards  Ambedkar's political stance of earlier period and activities of Ambedkarists at present.

Swami's younger days

Swami Anand Theertha was one of the Gandhians who fought for the welfare of oppressed with conviction. His original name was Ananth shenoy and born in influential Saraswatha brahmin family at Thallasery, Kerala on Jan 2nd 1905. From Childhood he was religious and had natural compassion for oppressed sections. Though he belonged to Kerala his younger days were in Tamilnadu only. He studied BA Hons and MA Physics in Presidency College, Chennai.

During this period only popular Vaikkom Satyagraha led by K.Kelappan and T.K.Madhavan took place in 1924. This struggle had its indelible impact on his mind. Anand shenoy was regular reader of YOUNG INDIA and had affinity with Gandhi. He was associated with Sabari ashram founded by T.R.Krishnamachari and it's activities. He participated in the activities of Congress also.

Mission against casteism

He engaged himself against practices of Untouchability also such as Denial of using Common roads, Common ponds, Hair dressing saloons etc. When he fought entry for oppressed in these places he faced onslaughts.

He was attracted towards the movement of Narayana guru who advocated One Caste, One religion and One God. Anand shenoy met Sri Narayana guru first at Coimbatore. In the first meeting itself Narayana guru understood the commitment and involvement of Anand shenoy in respect of welfare of Untouchables. After several meetings Narayana guru gave "Sanyasam" to Ananda shenoy waiving usual pre conditions to become sage in Dharma Paribalana Sangam. His name was also changed as Anand Theertha. After becoming Sage he undertook the task of rendering service to Untouchables as his primary goal. Likewise Anand Theertha became  mixed personality following the path of Gandhi & Narayana guru.

Visit to TN a turning point

Anandha Theertha concentrated in Education and Civil rights of oppressed in Kerala. At that time he participated as the leader of Kerala contingent in Vedaranyam salt Satyagraha led by Rajaji. En route he saw Slums of oppressed and separate places arranged for them in meetings conducted by Congress. Ananda Theertha raised this issue with Rajaji and Rajaji replied there would be no restrictions for others to sit with oppressed. Anand Theertha who had the experience of fighting Untouchability in Kerala, organised oppressed sections of Tamilnadu also to enter common ponds en route to Vedaranyam.Caste hindus resisted in all places vehemently. Satya grahis were defensive and this situation helped Anand Theertha to understand the plight of Dalits in Tamilnadu.

He started Sri Narayana Vidyalaya at Paiyanoor in North Malabar region for the benefit of Untouchables. He ran hostels also for them. He wanted that Dignity and Civil rights to be ensured for all. He launched agitations for Temple entry, Admission in schools, Entry in Saloons for hair dressIng, Right to dine at hotels, Usage of Common ponds etc and broke the barriers also. Agitations were on Ahimsa mode only.

He was attacked in every struggle and no struggle was without physical attack on him. It cannot be listed all struggles in one article since it was too long. He resorted to legal remedies also.He differed on this point with Gandhians. Gandhians felt that Change of mind was only option and compulsion was not solution for caste bias. Gandhi himself took up the position that he would not approach courts for solution and he would not prevent Dalits if they filed cases. Anand Theertha realised from his experience that Change of mind was not possible and struggles only would produce results. So he chose legal remedies also.

Swami in Melur region

Swami Anand Theertha was appointed as South Zonal office bearer of Harijan Seva Sangh even after the assassination of Gandhiji. He served this position between 1952 to 1958. He visited Madurai, Tiruchirappalli, Ramanathapuram, Thanjavur first and surveyed social discriminations and found various forms like denial of temple entry, Common pond, Tea shops, Saloon etc. There were discriminations even in schools run by Harijan welfare department. Harijans were not allowed by Caste hindus to do decent jobs.

Following this Anand Theertha started anti Untouchability campaign in 30 villages of Melur region. First he distributed leaflets among caste hindus to create awareness about rights of Dalits. However he realized that Caste mindset could not be changed by mere campaign. Hence he resorted to the mode of agitation by leading Dalits to places forbidden for them. He filed more than 100 cases against Untouchability and discriminatory practices.

Braving violent attacks

His first struggle was at Mangulam village of Madurai district where he organised Dalits to enter common pond. Enraging by this action Caste hindus resorted to Social boycotts. Dalits lost jobs and suffered due to poverty. Yet Swami and Harijan Seva Sangh leaders were firm in their struggle and succeeded in removing bans. In 1952 January, he escorted Dalits to one Brahmin hotel. A Caste hindu village munshif attacked Swami cruelly and broke his leg. Swami lodged complaint with police. This was shared by the people of that area when Stalin Rajangam went for survey. Swami faced similar violent attack when he led dalit children to a tea shop at Melavalavu village. At Athukulam village a common well was filled with Garbage by Caste Hindus when he led Dalits to take water in common well. He complained to police. Near Melur Swami was attacked severely by Caste hindus and case was filed after complaint by dalit boy who went with Swami with Village officer. Swami lodged complaint to police when Dalits were not allowed in Saloon at Kottaiyidi village. In March 1954, he led Devendrar community people to common pond. They were subjected to social boycott and agricultural jobs were denied to them by big land Lords. Harijan Seva Sangh took 18 acre government land on lease to give employment to Dalits. It undertook some irrigation work. Yet produce was damaged by Caste hindus. Though case was filed initially it was withdrawn due to influence of Caste hindus. Swami took up the issues of dalit students in Government school at Melur, Ban on cycling in villages imposed on Dalits, Against punishments and discriminations meted out to Dalits at Panchayat choultries etc.

Swami stood for full liberation not seva Sangh

His countless struggles and Mission for education were not properly appreciated by Harijan Seva Sangh. They believed in Change of mind not struggles. They took up positions in favour of Caste hindus in some cases. Restrictions were imposed on Swami by Seva Sangh and his work place was shifted from Melur to Madurai in 1955. He lost confidence in Sangh and came to a conclusion the Sangh was not interested in complete liberation of Dalits. Sangh was of opinion that Caste structure not to be destroyed. Swami thought liberation of Dalits should be given primary importance. Other agendas were secondary to him.

He wrote a letter to the General Secretary of Harijan Seva Sangh insisting Land to Dalits, Food security and abolition of Untouchability to be taken up by organisation with due attention. But Central committee of Seva Sangh had ordered him to work under one Gopal samy who was arch rival of Swami. He refused to work under him and returned to Kerala in 1958. But people of Tamilnadu invited Swami to Tamilnadu in 1985 and honoured him. He passed away on 21st Nov 1987. He was selfless fighter throughout his life.

Lesson of his life

Generally the oppressed would fight for their rights. That was the history of social movements. They would identify themselves with Dr Ambedkar. Even today they fight caste bias having Ambedkar in their banners. Swami was different. He launched direct struggles in villages and those records were important in the history. No other leader who claimed to be the fighters for dalit rights including dalit leaders could be compared with Swami. His work was unparalleled one. Mere words and writings are seemed to enough to claim their credentials for claiming themselves to be the leaders of Dalits now a days. Ananth Theertha proved deeds were important. Ambedkar and Gandhi may be bipolar in history But they had visited Sri Narayana Vidyalaya recognizing good work done by Swami.

(Article was published on the death anniversary of Swami Anantha Theertha on Nov 21, 2018 in Indian express -Tamil)


Thanks Krish
ஸ்வாமி ஆனந்த தீர்த்தரைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை கிரிஷ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு நன்றி.

Thursday, November 22, 2018

ஆனந்த தீர்த்தர் வாழ்க்கைப் பாடம்: தலித் விடுதலைக்கு பேச்சும், எழுத்தும் போதாது

2015-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அழகரசன், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தகவல் பறிமாறப்பட்டது. ஸ்டாலின் ராஜாங்கம் சொன்ன தகவல் அது

அம்பேத்கர், இந்தியாவில் கிராமங்களில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி இரண்டு சம்பவங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்த இரண்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவை. அதை எழுதியவர் ஆனந்த தீர்த்தர் என்கிற ஒரு காந்தியவாதி. அவர் ஹரிஜன சேவா சங்கத்தின் தென்மண்டலச் செயலாளராக இருந்துள்ளார். மேலூரில், ஹரிஜனங்களின் உரிமைகளுக்காக தீவிரமாகப் போராடியிருக்கிறார். அம்பேத்கரின் இந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு மேலூருக்கு கள ஆய்வு சென்றேன். ஆனந்த தீர்த்தர் மேலூரில் இருந்த காலத்தில் அவரை நேரில் பார்த்த தலைமுறையினரோடு பேசியபோது, அவரின் அர்ப்பணிப்புள்ள போராட்டத்துக்காக அவர்களின் வாழ்க்கை நினைவுகளில் சுவாமி ஆனந்த தீர்த்தர் பெருமை மிகு சித்திரமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால், அவரைப் பற்றிய எழுத்துப்பூர்வமான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லைஎன்று கூறினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு நான் ஸ்வாமி ஆனந்த தீர்த்தரைப் பற்றி தேடத் தொடங்கியபோதுதான், அவர் ஒரு முன்மாதிரியில்லாத சமூக சீர்திருத்தப் போராளியாக வாழ்ந்தார் என்பது தெரியவந்தது. பூனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பழைய அம்பேத்கரியர்கள் காந்தியை எதிரியாகவும் காந்தியவாதிகள் அம்பேத்கரை விரோதியாகவும் கருதி வந்தனர். இந்த எதிர் நிலைகளில் புதிய அம்பேத்கரியர்களிடம் மாற்றமேற்பட்டுள்ளது.

சாதியால் ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு கருத்தியல் ரீதியாக நட்பு சக்திகள் என்று சொல்லிக்கொண்டவர்களைவிட எதிர்நிலையாகக் கருதப்பட்ட காந்தியவாதிகள் ஹரிஜனசேவா சங்கத்தின் மூலம் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு செய்த பணிகளை சீர்தூக்கிப் பார்த்து, காந்தியையும் அர்ப்பணிப்புள்ள காந்தியவாதிகளையும் இணக்கமாக அனுகி வருகின்றனர்.
அதே போல, காந்தியவாதிகளும் சமகாலத்தில் இறுகிவரும் சமூக நிலைமைகளையும் அதில் தலித்துகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் கண்டு அம்பேத்கரின் அன்றைய அரசியல் செயல்பாடுகளையும் அம்பேத்கரியர்களின் இன்றைய செயல்பாடுகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர்.

தலித்துகளுக்காக அர்ப்பணிப்புடன் உண்மையாக ஹரிஜன முன்னேற்றத்தில் செயல்பட்ட ஒரு காந்தியவாதிதான் ஸ்வாமி ஆனந்த தீர்த்தர். ஆனந்த ஷெனாய் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் கேரளாவில் உள்ள தலைச்சேரியில் 1905ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி செல்வாக்குமிக்க ஒரு சரஸ்வாத பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே ஆண்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஆனந்த ஷெனாய், சாதியால் ஒடுக்கப்பட்டவர்களிடம் இயல்பாகவே பரிவுகொண்டிருந்தார். ஆனந்த ஷெனாய் கேராளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவருடைய இளமைக்காலம் முதல் தமிழகத்துடன் தொடர்புற்றிருந்தது.

இவர் மெட்ராஸில் இருந்த பிரஸிடென்ஸி கல்லூரியில் பி.. ஹானர்ஸ் மற்றும் எம்.. இயற்பியலும் படித்தார். இந்தக் கால கட்டத்தில்தான் 1924-ம் ஆண்டு கே.கேளப்பன் டி.கே.மாதவன் போன்றவர்களால் நடத்தப்பட்ட புகழ்பெற்ற வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் இவருடைய மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

சிறுவயதிலிருந்தே காந்தியின்யங் இந்தியாஇதழைப் படித்துவந்த ஆனந்த ஷெனாய் இயல்பாகவே காந்தியின் மீது பற்றுகொண்டிருந்தார். கேரளாவில் டி.ஆர்.கிருஷ்ணமாச்சாரியால் தொடங்கப்பட்ட சபரி ஆசிரமம் அதன் செயல்பாடுகளிலும் காங்கிரஸ் நடவடிக்கைகளிலும் இணைந்திருந்தார்.
அதே நேரத்தில் பொதுப்பாதைகள், பொதுக்குளம், சலூன் போன்ற இடங்களில் நுழைய மறுக்கப்பட்ட தீண்டப்படாதவர்களை அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று தாக்குதல்களைச் சந்தித்தவர் ஆனந்த ஷெனாய்.
இந்த நிலையில் ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற கொள்கையுடன் ஆன்மீக வழியில் கேரளாவில் சமூகச் சீர்த்திருத்தத்தை மேற்கொண்டிருந்த நாராயண குருவின் இயக்கம் அவரை ஈர்த்தது. ஆனந்த ஷெனாய் முதன் முதலாக கோயம்புத்தூரில் தான் நாராயண குருவைச் சந்தித்தார்.

முதல் சந்திப்பிலேயே நாராயண குரு இவருடைய அர்ப்பணிப்பையும் தீண்டப்படாதவர்களின் முன்னேற்றத்தில் அவருக்கிருந்த அக்கறையையும் புரிந்துகொண்டார். இருவருக்கும் இடையே பின் நிகழ்ந்த சந்திப்புகளில் நாராயண குரு அவருடைய தர்ம பரிபாலன சங்கத்தில் துறவியாவதற்கு இருந்த நிபந்தனைகளை எல்லாம் பார்க்காமல் உடனடியாக ஆனந்த ஷெனாய் அவர்களுக்கு தீர்த்தம் அளித்து சந்நியாசம் வழங்கினார். அவருடைய பெயரையும் ஆனந்த தீர்த்தர் என்று வழங்கினார்.

துறவு மேற்கொண்ட ஆனந்த தீர்த்தர் தீண்டப்படாதவர்களுக்கு பணி செய்வதையே தனது துறவின் நோக்கமாகக் கொண்டார். இப்படி காந்தியவாதி + நாராயண குரு கொள்கைகளின் கூட்டு ஆளுமையாக ஆனந்த தீர்த்தர் உருவானார்.

ஆனந்த தீர்த்தர் கேரளாவில் தீண்டப்படாதவர்களின் கல்வி, மற்றும் பொது உரிமைகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த கால கட்டத்தில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள ஆனந்த தீர்த்தர் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்களின் ஒரு குழு கேரளாவில் இருந்து திருச்சி வழியாக வேதாரண்யத்துக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

சிறப்புக்குழுவின் தலைவர் என்ற முறையில் ஆனந்த தீர்த்தர் திருச்சியில் ஹரிஜன சேரிகளைப் பார்த்து அவர்களின் துன்பங்களை அறிந்தார். அப்போது மாலை நேரங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தீண்டப்படாதவர்கள் மட்டும் தனியாகப் பிரித்து அமரவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த ஆனந்த தீர்த்தர் அது குறித்து ராஜாஜியிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு ராஜாஜி அவர்களுடன் யாரேனும் அமர விரும்பினால் தடை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

கேரளாவில் பொதுப்பாதைகளில் தீண்டப்படாதவர்களை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தியிருந்த ஆனந்த தீர்த்தர், தமிழகத்தில் வேதாரண்யம் உப்புச் சத்தியா கிரகத்துக்குச் செல்லும் வழி நெடுக இருந்த குளங்களுக்கு தீண்டப்படாதவர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது சாதி இந்துக்கள் அனைத்து இடங்களிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பாலான இடங்களில் சத்தியாகிரகிகள் யாருக்கும் இதில் துணிவில்லை. இந்த சம்பவங்கள் அவருக்கு தமிழ்நாட்டில் ஹரிஜனங்களின் பரிதாப நிலையைப் புரிந்துகொள்ள உதவியது.

தீண்டப்படாதவர்கள் முன்னேற்றம் அடைய கல்வி அவசியம் என்பதை உணர்ந்த அவர் வடக்கு மலபார் பகுதியில் பையனூரில் ஸ்ரீ நாராயண வித்யாலயா என்ற பள்ளியைத் தொடங்கினார். வறிய நிலையில் இருந்த தீண்டப்படாதவர்களுக்கு பல இடங்களில் விடுதிகளை நடத்தினார். அதோடு அவர்கள் சமூக மரியாதையும் பொதுச் சமூக உரிமைகளையும் பெற வேண்டும் என்று விரும்பினார். அதனால், தீண்டப்படாதவர்களுக்கு மறுக்கப்பட்ட பொதுப்பாதைகள், கோயில் நுழைவு, பள்ளிக்கூடங்களில் சேர்தல், பொதுக்குளத்தில் நீரெடுத்தல், சலூனில் முடிவெட்டுதல், ஓட்டல்களில் சாப்பிடுதல் போன்ற பொது உரிமைகளுக்காக தீண்டப்படாதவர்களை அழைத்துச் சென்று கட்டுப்பாடுகளை உடைத்தார். எல்லா இடங்களிலும் காந்திய முறையில் அமைதியான வழியிலேயே போராட்டம் நடத்தினார்.

சாதிய கட்டுகளை மீறிய எல்லா இடங்களிலும் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவர் தாக்கப்படாத போராட்டங்களே இல்லை என்று கூறலாம். அவருடைய போராட்டங்களை பட்டியலிட இந்த கட்டுரை போதாது என்ற அளவுக்கு எண்ணற்ற போராட்டங்கள். அவர் வெறுமனே போராட்டங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த கட்டமாக அவர் சட்டவழியிலும் தனது போராட்டத்தை தொடர்ந்தார் என்பதில் இருந்தே அவர் பொதுவான காந்தியவாதிகளிடமிருந்து மாறுபடுகிறார்.

பொதுவாக சாதியைப் பற்றிய அனுகுமுறையில் சாதி இந்துக்கள் அவர்களாகவே மனமாற்றம் அடைய வேண்டும். அவர்களை வற்புறுத்தி சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க முடியாது என்பது காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. அதேபோல, சாதிய ஒடுக்குமுறை நிகழ்த்தும் சாதி இந்துக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்த மாட்டேன். ஆனால், ஹரிஜனங்கள் சாதி இந்துக்கள் மீது சட்டரீதியா வழக்கு தொடர்வார்களானால் அதைத் தடுக்க மாட்டேன் என்பதுதான் காந்தியின் நிலைப்பாடாக இருந்தது.

காந்தியவாதியான ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் இந்த இடத்தில்தான் காந்தியின் அணுகுமுறையிலிருந்து மாறுபடுகிறார். சாதிய ஒடுக்குமுறையை நிகழ்த்துபவர்கள் அவர்களாகவே மனம் மாறுவார்கள் என்று நினைத்த ஸ்வாமி ஆனந்த தீர்த்தருக்கு நடைமுறையில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதனால், சாதியத் தடைகளை மீறி போராடுவதன் மூலமே ஹரிஜனங்கள் உரிமையைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதனை சட்ட ரீதியாகவும் முன்னெடுத்தார்.

காந்தியின் மறைவுக்குப் பின்னரும்கூட தொடர்ந்து செயல்பட்டுவந்த ஹரிஜன சேவா சங்கம் ஸ்வாமி ஆனந்த தீர்த்தரை தென்மண்டல அலுவலராக நியமித்தது. 1952 முதல் 1955 வரை இந்தப் பொறுப்பில் இருந்து செயல்பட்டார்.

முதலில் தமிழகத்தின் ராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டார். இப்பகுதி கிராமங்களில் ஹரிஜனங்களுக்கு கோயில் நுழைவு, பொதுக்கிணறு, டீ கடை, சலூன் ஆகிய இடங்கள் மறுக்கப்பட்டதைக் கண்டார். மேலும், ஹரிஜன நலத்துறை பள்ளிகளிலேயே கூட பாகுபாடு இருந்ததை அறிந்தார். ஹரிஜனங்கள் ஒரு கௌரவமான வேலையை செய்யக் கூட சாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்த்து தனது தீண்டாமை ஒழிப்பு பணியைத் தொடங்கினார். முதலில் அவர் சாதி இந்துக்களின் கண்களைத் திறக்கும் விதமாக துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு கிராமங்கள் தோறும் விநியோகித்தார். ஆனால், சாதி இந்துக்களின் மூடநம்பிக்கையை ஒழித்து சாதிய மனத்தில் விழிப்புணர்வை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தார். ஹரிஜனங்கள் நுழைவு எங்கெல்லாம் மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் ஹரிஜனங்களை அழைத்துச் சென்று தீண்டாமைக்கு அறைகூவல் விடுத்தார். ஹரிஜனங்களின் மீதான தீண்டாமை, சாதி பாகுபாடு நடைமுறைகளுக்கு எதிராக அவர் ஆண்டுக்கு நூறு வழக்குகளுக்கு மேல் பதிவு செய்தார்.

தமிழகத்தில் ஸ்வாமி ஆனந்த தீர்த்தரின் போராட்டங்கள்

ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் முதலில் மாங்குளம் கிராமத்தின் ஹரிஜனங்களை பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு அழைத்துச் சென்று தனது போராட்டத்தை தொடங்கினார். ஸ்வாமியின் இந்த செயலால் கோபமடைந்த சாதி இந்துக்கள் ஹரிஜனங்களின் மீது சமூகத் தடை விதித்தார்கள். இதனால் வேலைவாய்ப்பை இழந்த ஹரிஜனங்கள் வறுமையில் உழன்றனர். ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் மற்றும் ஹரிஜன சேவா சங்க தலைவர்களின் உறுதியான தலையீட்டுக்கு பின்னரே இந்த தடை திரும்பப் பெறப்பட்டது.

ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் மாங்குளத்தில் ஒரு பிராமணர் ஹோட்டலுக்கு ஹரிஜனங்களை அழைத்துச் சென்றார். அதற்காக சாதி இந்துக்களின் கிராம முன்சீஃப் ஒரு கட்டையால் ஸ்வாமியை இரக்கமற்ற முறையில் தாக்கியதில் ஒரு கால் உடைந்தது. தாக்கியவர்களுக்கு எதிராக ஸ்வாமி போலீஸில் புகார் செய்தார். இந்த சம்பவத்தை ஸ்டாலின் ராஜாங்கம் கள ஆய்வு மேற்கொண்ட பகுதியில் ஸ்வாமியை நேரில் பார்த்தவர்கள் நினைவு கூர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல, ஸ்வாமி ஹரிஜன சிறுவர்களுடன் மேலவளவு கிராமத்தில் தேநீர் கடைக்கு போனபோது, சாதி இந்துக்களிடமிருந்து கடுமையான தாக்குதலைச் சந்தித்தார்.

ஆத்துக்குளம் கிராமத்தில் ஹரிஜனங்களுடன் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, சாதி இந்துக்கள் கிணற்றில் குப்பைகளைப் போட்டார்கள். இது பற்றி அவர் போலீஸில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்தார்.
வேலூர் அருகே ஒரு கிராமத்தில் ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் ஒரு ஹரிஜன சிறுவனுடன் தேநீர் கடைக்கு சென்றபோது அந்த வட்டார சாதி இந்துக்களால் கடுமையாக தாக்கப்பட்டார். அந்த சிறுவன் வெளியே ஓடி கிராம அலுவலருக்கு தகவல் அளித்த பிறகு, கிராம அலுவலரின் உத்தரவின் பேரில் சாதி இந்துக்களுக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோட்டையடி கிராமத்தில் ஹரிஜன சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்தபோது, ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் முடிவெட்டுபவருக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார்.

ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் 1954ம் ஆண்டு மார்ச் மாதம் சூரக்குடி கிராமத்தில் ஒரு பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கு ஹரிஜன தேவேந்திரர்களுடன் சென்றார். இதனால், கிராமத்தவர்களால் பொருளாதார தடைவிதிக்கப்பட்டது. ஹரிஜன தேவேந்திரர்களுக்கு ஜமீன்கள் நிலம் குத்தகை அளிக்கவும் விவசாய வேலை அளிக்கவும் மறுத்தனர். வேலையாட்களை முழுவீச்சில் மீட்டெடுப்பதற்காக ஹரிஜன சேவா சங்கம் பாசன வசதிக்காக கரை கட்டுமான வேலையை எடுத்தது. அந்தச் சூழலில், ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் 18 ஏக்கர் அரசு நிலத்தை குத்தகை எடுத்து அதை ஹரிஜனங்களுக்கு விவசாயம் செய்ய அளித்தார். அதில் ஹரிஜனங்கள் விளைவித்த பயிரை சாதி இந்துக்கள் அழித்தனர். இதை ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் போலிஸுக்கு எடுத்துச் சென்றார். போலீஸார் சாதி இந்துக்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தாலும், சாதி இந்துக்களின் செல்வாக்காலும், அழுத்தத்தாலும் பணிந்து வழக்கு திரும்பப்பெறப்பட்டது.

மேலூரில் அரசு பள்ளிகளில் ஹரிஜன மாணவர்கள் மீதான சாதிய பாகுபாடுகளை ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் தீவிரமாக எதிர்த்தார். கிராமங்களின் தெருக்களில் ஹரிஜனங்கள் சைக்கிள் ஓட்ட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தார்.

ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் சாவடிகளில் ஹரிஜனங்களுக்கு அநியாயமான முறையில் கொடூரமான தண்டனை வழங்குவதற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார். இதனை முடிவுக்கு கொண்டுவர துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு விரிவான பிரச்சாரம் மேற்கொண்டார். சாவடி பஞ்சாயத்துகளில் ஹரிஜனங்கள் மீதான சாதி பாகுபாடுகளுக்கு எதிராக அரசிடமும் போலீஸாரிடம் முறையிட்டார்.

இப்படி எண்ணற்ற போராட்டங்களையும் ஹரிஜனங்கள் முன்னேற்றத்தில் கல்விப் பணியையும் மேற்கொண்ட ஸ்வாமி ஆனந்த தீர்த்தரின் பணியை அங்கீகரிக்க ஹரிஜன சேவா சங்கம் தவறியது. சாதி இந்துக்களின் மனநிலையை மாற்றுவதால் மட்டுமே தீண்டாமை ஒழிப்பு சாத்தியம் என்று நம்பிய அவர்கள் ஆனந்த தீர்த்தரின் போராட்ட வழிமுறையில் சிக்கல் உள்ளதாகக் கருதினார்கள். அவர்களுடைய அரசியல் லாபத்துக்காக சாதி இந்துக்களுக்கு ஆதரவாக எதிர் வழக்குப்பதிவு செய்தார்கள்.

இதைத்தொடர்ந்து ஹரிஜன சேவா சங்கத்திடமிருந்து ஸ்வாமி ஆனந்த தீர்த்தருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் அவருடைய பணி மையம் மேலூரில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்டது. ஸ்வாமி ஹரிஜன சேவா சங்கத்தின் பணியிலும் தலைமையிலும் நம்பிக்கை இழந்தார்.

ஹரிஜனங்களின் முழு விடுதலையில் ஹரிஜன சேவா சங்கம் லட்சியம்கொள்ளவில்லை என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில், அது இந்து மதத்தின் பல்வேறு சாதிகளுடைய தொகுப்பில் லட்சியம் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தார். ஸ்வாமி ஆனந்த தீர்த்தரோ ஹரிஜனங்களின் முழு விடுதலையில் லட்சியம் கொண்டிருந்தார். மற்ற விஷயங்கள் எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது.

அவர் ஹரிஜனங்களுக்கு உணவு, நிலம், தீண்டாமையிலிருந்து முழு விடுதலை அவசியம் தேவை என்று ஹரிஜன சேவா சங்க பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். ஹரிஜன சேவா சங்கத்தின் மத்தியக் குழுவோ அவருடைய கடும் எதிரியான கோபாலசாமியின் கீழ் வேலை செய்ய கேட்டுக்கொண்டது. அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்து கேரளாவில் அவருடைய பணியைத் தொடருவதாகக் கூறி 1955ல் கேரளாவுக்கு திரும்பினார்.

பின்னாட்களில், நன்றி மறவாத தமிழ்நாட்டு மக்கள் ஸ்வாமி ஆனந்த தீர்த்தரின் பணிகளைப் புரிந்துகொண்டு 1985ம் ஆண்டு அவரை மதுரைக்கு வரவழைத்து அவருடைய சேவைக்காக பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். வாழ்நாள் முழுவதும் தன்னலமில்லாதா போராளியாகவே வாழ்ந்த ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் நவம்பர் 21, 1987 ஆம் ஆண்டு மறைந்தார்.

பொதுவாக சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்தே நடத்தப்பட்டுவந்துள்ளது. கிராமங்களில் தலித்துகளுக்கான பொது உரிமைப் போராட்டங்கள் அந்த மக்களாலேயே நடத்தப்பட்டது என்றே பதிவாகிவந்துள்ளன.

அப்படி போராட்டம் நடத்தியவர்கள் தங்களை அம்பேத்கரோடு அடையாளப்படுத்திக்கொண்டார்கள். இன்றும் கூட இப்படியான போராட்டங்களை நடத்துபவர்கள் ஏதோ ஒரு வகையில் அம்பேத்கரைப் பதாகையாகக் கொண்டிருகிறார்கள். இதிலிருந்து முற்றிலும் மாறாக ஒரு காந்தியவாதி சாதியம் அதன் முழு வீர்யத்தோடு நிற்கும் கிராமங்களில் நேரடியாக எதித்தார் என்பது சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானது.

ஸ்வாமி ஆனந்த தீர்த்தரைப் போல தன் வாழ்நாள் முழுவதும் ஹரிஜனங்களுக்கான கல்விப்பணியையும், தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களையும் நடத்தியவர்கள் என்று தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லிக்கொள்வர்கள் மட்டுமல்ல தலித் தலைவர்களில் கூட எவரும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

தலித்துகள் தங்களின் பொது உரிமை, கல்வி வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றுக்காக போராடும்போது தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பதாகத் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள்,, முற்போக்கு சக்திகள், அனைவரும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் ஆதரவு தெரிவிப்பதையே மிகப்பெரிய சேவையாக நினைக்கின்றனர். உண்மையில் அவர்களின் ஆதரவான எழுத்தும் பேச்சும் மட்டுமே போதுமானவை அல்ல. ஆனந்த தீர்த்தரைப் போன்ற செயல்பாடுகளே அவசியம்.

அம்பேத்கர் காந்தியையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து வந்தபோதிலும், ஸ்வாமி ஆனந்த தீர்த்தரின் ஒப்பற்ற பணியைப் புரிந்துகொண்டதால்தான் அவர் நடத்திய ஸ்ரீ நாராயண வித்யாலயா பள்ளியை காந்தி மட்டுமல்ல அம்பேத்கரும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளார்.

(கட்டுரையாளர் .பாலாஜி அந்தணர், பத்திரிகையாளர். நவம்பர் 21, ஆனந்த தீர்த்தரின் நினைவு நாள். அதையொட்டி இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)

நன்றி: IE Tamil (The Indian Express)